இந்தமுறை பொங்கல் விடுமுறை நீண்ண்ண்ண்ட நாட்கள் இருந்ததுபோல் ஒரு உணர்வு.பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சியை விட்டால் வேறு போக்கிடம் இல்லாமல் போய்விட்டது.
காணும் பொங்கல் அன்று பெரியவர்கள், நண்பர்களை கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளாமல் தொலைக்காட்சியை கண்டு கொண்டு இருக்கிறோம்.
புதிதாக வந்த திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கலாம் என்றால் திரையரங்கத்தினர் ஒரு வாரத்திற்குள் போட்ட பணத்தை எடுக்கும் பொருட்டு விலையை அவர்கள் விருப்பத்திற்கு உயர்த்தி விடுவார்கள்..அதுவும் ரசிகர்கள் இடும் கூச்சலில் படம் பார்த்த திருப்தியே வராது.
இந்தமுறை பலவருடங்கள் கழித்து சர்க்கஸ் சென்றோம். சர்க்கஸின் கூரையில் உள்ள கிழிசல்களே அவர்களின் வறுமை நிலையை உணர்த்துகிறது. குழந்தைப்பருவத்திற்கு திரும்பிவிட்டாற்போன்று ஒரு உணர்வு. ஆனால், விலங்குகள் நலவாரியத்தின் புண்ணியத்தால் நான் சென்றபோது சர்க்கஸில் இருந்த விலங்குகள் இப்போது 10 சதவீதம் கூட இல்லை. 1 யானை,2 குதிரை,2 ஒட்டகம்,3 நாய்கள் இவை மட்டுமே காண முடிந்தது. இவைகளை விலங்குகள் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்களா தெரியவில்லை.அவைகளும் பார்க்க பரிதாபமான நிலையில்தான் இருந்தது.
பிழைப்புக்காக மனிதர்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தரத்தில் செய்யும் சாகச விளையாட்டுகளை காணும்போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. குள்ள மனிதர்களை பார்க்கும்போது அபூர்வசகோதரர்கள் கமல்தான் நினைவுக்கு வந்தார்.பரிகசிக்கும் இளைஞர்களை பொருட்படுத்தாமல் நிறைவாக சிரித்தமுகத்துடனும், குறைவான ஆடைகளுடனும் வந்த பெண்களின் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
நீண்ட கத்தியை இருதயம் வரை சொருகுவது,கத்திப்படுக்கையின் மேல் படுப்பது.சைக்கிள் சாகசங்கள்,மரணகூண்டில்(அப்படிதான் அறிவித்தார்கள்) மோட்டார் சைக்கிள் சாகசம்,ஒரு சாகசக்காரர் 1 லிட்டர் தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் அதை வாய்வழியே அதை சிறிது சிறிதாக வெளியேற்றுகிறார்.இருவேறு வண்ணங்கள் கொண்ட தண்ணீரை குடித்து அதை தனித்தனியாக வெளியேற்றியது வியப்பூட்டுவதாக இருந்தது. (இந்தப்பயிற்சி யோகக்கலையின் மூலம் சாத்தியம் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் பகிரவும்)இப்படி இரண்டரை மணி நேரக்காட்சியை ஓட்டுவதற்கு பாடுபடுகிறார்கள்.
குழந்தைப்பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுறுத்துகிறது.என் மகளை யானை வரும் என்று சொல்லியே தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டேன்.உங்கள் ஊரில் சர்க்கஸ் நடைபெற்றால் நம்முடைய குழந்தைகளுக்காகவும்,சர்க்கஸில் உள்ள கலைஞர்களுக்காகவும் ஒருமுறை சென்று வாருங்கள். மகளுக்கு மகிழ்ச்சியுமாய்,மனதுக்கு நெகிழ்ச்சியுமாய் நேற்றைய பொழுது கழிந்தது.
குறிப்பு: பதிவில் இருக்கும் படங்கள் கூகிளின் வழியே எடுத்தது.சர்க்கஸ் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.