சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

5.9.13

பதிவர் திருவிழா 2013

                                                

இந்த பேஸ்புக் என்ற கொடிய அரக்கனால் நான் எழுதி(?!) வளர்த்த வலைப்பூவை மறந்தே போன நிலைமையிலதான் வராது வந்த மாமழை போல் சங்கவி அண்ணன் போன் பண்ணி வலைப்பதிவர் சந்திப்புக்கு கூப்டாரு...ஐயம் ஆல்வேஸ் பிஸின்னு கவுண்டர் ஸ்டைல்ல சொல்லலாம்தான்...ஆனா,எதுவுமே எழுதாம இருந்தா வலைப்பூ கருகிப்போற அபாயத்த நெனச்சி உடனே வர்றேன்னு சொல்லிட்டேன்.


இந்ததடவை முதல்முறையா குளுகுளு ரயில் பயணம் வேற...குளிர்ல படுத்திருந்திட்டு சென்னைல வந்து இறங்குனா...ஸ்ஸ்ப்பா...என்னா வெயிலு..என்னா புழுக்கம்.வண்டில போற எல்லாரும் முகமூடி திருடங்க மாதிரி போக வேண்டியிருக்கு...சென்னை மக்கள நெனச்சா பாவமா இருக்கு.

சேலத்துலயும் பஸ்களுக்கு நம்பர் கொடுத்திருக்காங்க...ஆனாலும்,சென்னைல இருக்கற மாதிரி இனிஷியல் எல்லாம் இல்ல...புதுசா வர்றவங்க பஸ் நெம்பர நோட் பண்ணும்போது குழம்பாம இருக்கணும்.


AVM ஸ்டுடியோ எதிர்லதான் தங்கற இடம் இருந்தது.ஸ்டுடியோ வாசல்ல சுத்திட்டு இருக்கற உருண்டைய நான் பார்த்த பார்வையில அங்க இருந்த வாட்ச்மேன் ஒரு நாளைக்கு பத்து பேராவது கிராமத்துலருந்து வந்திடறானுங்கன்ற மாதிரியே பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புறம் எங்களுக்கு கொடுத்த ரூம்ல "பின்னூட்டப்புலி" பதிவுலகில் "DD" என்று செல்லமாக அழைக்கப்படும் "திண்டுக்கல்" தனபால் அண்ணனைப் பார்த்ததில் மகிழ்ச்சி.போலவே அண்ணன்கள் சைதை அஜீஸ்,திருப்பூர் ஜோதி,குடந்தை சரவணன்,ஸ்கூல்பையன்,பட்டிக்காட்டான் ஜெய் போன்ற பதிவுலக பிரபலங்களை கண்டதும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதிகாலையிலேயே  எழுந்து ஒரு இளைஞருக்குண்டான உற்சாகத்துடன் விழாவிற்கு கிளம்பிவந்த பழனிகந்தசாமி அய்யாவைப் பார்த்து எனக்குள்ளும் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கிட்டாரு.

பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருந்தும் 50ரூ சொந்தக்காசை போட்டு காலை சிற்றுண்டி முடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.சென்னைக்கு வர்றேன்னு ஸ்டேட்டஸ் போட்டதும் எல்லாரும் ஆப்லைனுக்கு போய்ட்டாய்ங்க...  :(







விழா அரங்கத்திற்குள் நுழையும் போதே வரவேற்புக் குழுவிற்குண்டான கடமையுடன் "புது மாப்பிள்ளை" பிலாசபி பிரபா ஜிகுஜிகுவென்ற சந்தன கலர் சட்டையுடன் வாசலிலேயே நம்மை வரவேற்றார்.ஆரூர் மூனா அதுக்கும் மேல...ஒரு வித்தியாசமான கலர்ல வேட்டியும் சட்டையும் போட்டுகிட்டு மாலை எல்லாம் போட்டுட்டு இருந்தாரு...சபரிமலைக்கு போறீங்களா பாஸ்ன்னு கேட்டேன்.கேப்டன் விஜயகாந்த் மாதிரி அழகா சிரிச்சாரு.கூட இருந்த கே.ஆர்.பி செந்தில் அண்ணன்தான் இது தஞ்சாவூர் ஸ்டைலுன்னு சொன்னாரு...கேப்டன் இனிமே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு...அவரு இடத்துக்கு தாராளமா இவர போடலாம்.மெட்ராஸ்பவன் சிவக்குமார் சட்டையெல்லாம் தொப்பலா நனைய வேலை செஞ்சிட்டு இருந்தாரு...கடமைன்னு வந்துட்டா கடமைக்குன்னு செய்ய மாட்டாரு போல...என்ன தனியா ஒரு போட்டோ வேற எடுத்தாரு..(எதுக்காருக்கும்)


எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.பாரதிமணி அவர்களை சந்திச்சதும் இன்ப அதிர்ச்சியா இருந்தது.டிஸ்கவரி புக் பேலஸில் "பலநேரங்களில் பல மனிதர்கள்" புத்தகம் கேட்டேன்.வந்துட்டே இருக்குன்னு சொன்னாரு...மனசுக்குள்ள பலநூறு புத்தகம் இங்க இருந்தாலும் இல்லாத புத்தகத்ததான் கேப்பானுங்கன்னு வேடியப்பன் நெனச்சிருப்பாரு. :)


பதிவுலகின் நகைச்சுவை அரசன் சேட்டைக்காரனையும் கண்டேன்.அவரும் எளிமையா பழகுவதற்கு இனிமையா இருந்தாரு.இந்த அமைதியான முகத்திற்கு பின்னால் எத்தனை (வார்த்தை) சேட்டைகள்.அவரோட புத்தகமும் அன்னிக்கு வெளியிட்டாங்க...அண்ணனோட ஆட்டோகிராப்போட வாங்கிட்டு வந்துட்டேன்.அட்டையில் எழுத்தாளரோட படத்தையே கேலி பண்ணி போட்ட முதல் புத்தகம் இதுவாதான் இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.


கேபிளின் கதை புத்தகத்தை வாங்கி கேபிள் அண்ணன்கிட்ட ஆட்டோகிராப் வாங்கியாச்சு...படிக்க ஆரம்பிச்சா அவ்வளவு சுவாரஸ்யம்.எனக்கு பிடித்த தொழில்நுட்ப தகவல்கள்  கொட்டி கிடக்கு.

பதிவர்கள் அஞ்சு அஞ்சு பேரா அறிமுகப்படுத்திக்க சொன்னாங்க...அதுல எல்லாரும் ப்ளாக்கர் டெம்ப்ளேட் மாதிரி ஒரே மாதிரி அறிமுகப்படுத்திகிட்டோம். "தல" "கோகுலத்தில் சூரியன்" வெங்கட் போன்ற சில சி(ரி)றப்பு பதிவர்கள்தான் வித்தியாசமா அறிமுகப்படுத்திகிட்டாங்க.


புதுசா வலைப்பூ ஆரம்பிக்கறவங்களுக்கு அ முதல் ஃ வரை சொல்லித்தர்ற தொழில்நுட்ப பதிவர்கள் பிளாக்கர் நண்பனையும், பிரபு கிருஷ்ணாவையும் முதல் முறையா சந்திச்சது  மிக மகிழ்ச்சியா இருந்தது.மேடையில் இவர்கள் இருவரையும் தனியா ஸ்பெஷலா அறிமுகப்படுத்தியிருக்கலாம்ன்னு தோணுச்சு...


மேடையில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் பாரதிமணி,பாமரன்,கண்மணி குணசேகரன்,வா.மு.கோமு போன்றோர் பேசிய பேச்செல்லாம் வாய தொறந்து கேட்டுட்டு இருந்தேன்.பாமரன் பேசியபோது சுயஎள்ளல் கலந்த பேச்சு அனைவரையும் கவர்ந்துச்சு...பேச்சுக்கு நடுவுல பேஸ்புக்க ஓட்டு ஓட்டுன்னு ஓட்னாரு...கண்ட கண்ட நாயோடல்லாம் போட்டோ எடுத்துட்டு பேஸ்புக்ல அப்டேட் பண்றானுங்க...இவ்ளோ ஏன் என் கூடக்கூட போட்டோ எடுத்துக்கறாங்கன்னா பாருங்களேன் சொன்னாரு.அவ்ளோ கேவலமா சொன்னாலும் அவரு கூட நின்னு போட்டோ எடுத்துகிட்டேன்.   :)

                                      

 வா.மு.கோமு எழுத்தாளர்ன்ற பந்தா எல்லாம் பண்ணாம நட்புணர்வுடன் பழகியது ஆச்சர்யமா இருந்தது.அவருடைய கிராமத்து வாழ்க்கை அவர மாத்தாம வச்சிருக்குன்னு நினைக்கிறேன்.அவருடைய மேடைப்பேச்சிலும் கூட சென்னை நகர வாழ்க்கைய பத்தி கிண்டலா சொன்னாரு.





அண்ணன் சுரேகாதான் நிகழ்ச்சியை அவருக்கேயுரிய சிறப்புடன் தொகுத்து வழங்குனாரு...மேடை நிகழ்ச்சிக்கு தேவைப்படும் அந்தந்த சமயத்திற்கு ஏற்ற ரசிக்கும்படியான விமர்சனங்கள் அவரிடமிருந்து அப்பப்ப வந்துட்டே இருந்தது.அவருடைய ஆளுமைத்திறன் வளர்ப்பு புத்தகங்கள் 2 வாங்கிட்டு வந்துருக்கேன்.அடுத்த வருட விழாவிற்குள் படிச்சிரணும்.  :)

மொத்தத்தில் இந்த பதிவர் திருவிழாவை மறக்க முடியாத சந்திப்பாக மாற்றிய விழாக்குழுவினரோட உழைப்புக்கு நன்றி சொல்லியே ஆகணும். குறையொன்றுமில்லை(எனக்கு). அடுத்த விழாவில் சந்திப்போம்.



Post Comment